Sunday, August 12, 2012

பலூன் சாகசம்!

Posted On Aug 12,2012,By Muthukumar

AirBalloon
குட்டி பலூன்கள் குழந்தைகளுக்குப் பிடிக்கும். ஆனால் பெரியவர்களைக் கவர்ந்தவை `மெகா' பலூன்கள். அந்த பிரம்மாண்ட பலூன்களில் பறப்பது சர்வதேச அளவில் ஒரு சாகச விளையாட்டாகவும், பொழுதுபோக்காகவும் உள்ளது.
145 ஆண்டுகளுக்கு முன்னர், பலூன் போன்ற ஓர் அமைப்பில் பறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஜோசப் மாண்ட் கால்பியர், எடியன் மாண்ட் கால்பியர் என்ற பிரான்சு நாட்டு சகோதரர்கள் மெல்லிய காகிதங்களைக் கொண்டு ஒரு பெட்டி செய்து, அதனுள் வெப்பமான காற்றை நிரப்பினார்கள். அது, விறகு போட்டு எரித்த அடுப்பில் இருந்து வெளிப்பட்ட காற்று.
வெப்பக் காற்று நிரப்பப்பட்ட அக்காகிதப் பெட்டி, ஆகாயத்தில் மிகவும் உயரத்துக்குச் சென்று பறந்தது.
அதே சகோதரர்கள் 1783-ம் ஆண்டு, துணியால் செய்யப்பட்ட பெட்டியில் வெப்ப வாயுவை அடைத்துப் பறக்கவிட்டுச் சோதனை நடத்தினார்கள்.
அதே ஆண்டில் ஆகஸ்டு மாதம் 17-ம் தேதி பிரான்சில் சார்லஸ் என்பவர் பட்டுத் துணியில் பலூன் போன்ற ஒன்றைச் செய்து ஹைட்ரஜன் வாயுவை அதில் நிரப்பி அந்தப் பலூனின் உதவியுடன் ஆகாயத்தில் பறந்தார். ஆனால் அந்த முயற்சி பாதுகாப்பானதாக இல்லை. அபாயகரமானதாக இருந்தது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜெல்ரீஸ் என்பவரும், பிளாங்கார்டு என்பவரும் மேம்படுத்தப்பட்ட ஒரு பெரிய பலூனில் ஏறி 1785-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி வானத்தில் பறந்தார்கள். 22 மைல் தூரம் அவர்கள் வானத்தில் பயணம் செய்தார்கள். அதைப் போல பலரும் மிகுந்த துணிச்சலுடன் பலூன் மூலம் நீண்டநேரம் விமானத்தில் பறந்து சாதனை படைத்தனர்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த சாந்தா டியூமா என்பவர், பலூனில் ஒரு சிறு எந்திரத்தைப் பொருத்தி அதன் உதவியுடன் வானத்தில் பறந்து பயணித்தார்.
அவரது பலூனின் முகப்பில் உள்ள ஒரு காற்றாடியை அவர் பொருத்திய எந்திரம் சுழலச் செய்தது. காற்றாடி சுழல்வதால் காற்று பின்னோக்கித் தள்ளப்பட, பலூன் ஆகாயத்தில் பறந்தது.
சாந்தா டியூமாவுக்குப் பிறகு பலரும் பலூன்கள் மூலம் பறந்து சாதனை புரிந்தனர். அதன்பிறகு பல்வேறு மாற்றங்களுடன் பலூனில் பறப்பது பாதுகாப்பானதாக மாறியது.

No comments:

Post a Comment